வேலணை துறையூர் ஐயனார் கோவிலுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும்: டக்ளஸ்

27 Jan 2012

தீவகம் வேலணைத் துறையூர் ஐயனார் கோவிலின் இராஜகோபுர நிர்மாண பணிகளுக்காக கட்சி நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாவை முதற்கட்டமாக வழங்குவதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 


வேலணைப் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் வேலணைத் துறையூரிலுள்ள ஐயனார் கோவிலுக்கென புதிதாக அமையப் பெறவுள்ள இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

ஆலய பரிபாலன சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும் போது

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கிணங்கவே நாமும் எமது மக்களுக்கான சேவைகளை ஆற்றி வருகிறோம். புதிதாக அமையப்பெறவுள்ள இராஜகோபுர கட்டிட புனரமைப்பிற்காக எமது கட்சி நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக வழங்கவுள்ளளோம். நீண்டகாலமாக கட்டிடப் பணிகள் பூர்த்தியடையாமல் உள்ள துறையூர் கலாசார மண்டபத்தை விரைவில் முழுமையாகப் புதுப்பொலிவுடன் கட்டி முடிப்பதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். 

தீவகத்தில் மக்கள் நலன் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு புறம்பாக 1000 கோடி ரூபாவை வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இந்நிதியிலிருந்து தீவகத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். 

அத்துடன் அந்தந்தப் பகுதிகளில் குழுக்களை அமைத்து மக்களது தேவைகள் இனங்காணப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கட்சி நிதியினூடாகவும் தீவகத்தின் அபிவிருத்திக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் மக்களது அபிவிருத்தியும் மேம்பாடுமே தமது நோக்கமெனவும் இதன்போது அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரகுருமூர்த்தி (மோகன்) ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 
இதேவேளை யாழ்.நெடுங்குளம் மக்களது பிரச்சினைகளுக்கு அப்பகுதிக்கு நேரில் சென்று துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆராய்ந்து முடிவெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அமைச்சரின் யாழ். அலுவலகத்திற்கு இன்று வந்த கொழும்புத்துறை கிழக்கு நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தமது பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரிடம் விளக்கினார்.

மக்களது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்ட  டக்ளஸ்  இவ்விடயம் தொடர்பாக அடுத்த மாதம் முதல்வாரத்தில் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு காணி விடயம், மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத் தருவதாகவும் அதுவரையில் பொறுமைகாக்கும் அதேவேளை, இவ்விடயத்தில் தமக்கு முழுமையான ஒத்துழைப்பும், ஒத்தாசையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதன் போது யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மாநகர சபை உறுப்பினர் றீகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Ads
Latest Videos